Tuesday, July 13, 2010
மதராசப்பட்டினம்
இரண்டு முறை பார்த்தாயிற்று. சற்றும் சலிப்பு ஏற்படவில்லை. தமிழ் சினிமாவின் தரத்தை பறைசாற்ற இன்னுமொரு படம். நிச்சயம் மக்கள் மனதை அள்ளும். சுதந்திர போராட்ட நேரத்தில் ஒரு சலவைக்காரனுக்கும் ஆங்கிலேய கவர்னர் மகளுக்கும் காதல், அவ்வளவுதான் கதை.ஆனால் படமாக்கியிருக்கும் விதம் க்ளாஸ். திரைக்கதையில் பின்னியிருக்கிறார் இயக்குனர் விஜய். மூன்று மணி நேரப்படம் என்றாலும் திருப்பங்களுடன் தொய்வில்லாமல் செல்கிறது.
இப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தில் காமெடி சற்றும் எதிர்பாராதது. முதல் பாதியில் ஹனிஃபா, வாத்தியாருடன் ஆர்யா நண்பர்கள் அடிக்கும் லூட்டியில் பல இடங்ககளில் தியேட்டர் குலுங்குகிறது. இயக்குனருடன் படத்தின் வெற்றிக்கு உதவுபவர்கள் கலை இயக்குனரும், ஒளிப்பதிவாளரும்.ஆண்டனியின் கட்-பேஸ்ட் வேலைகள் ஷார்ப்.
40 களில் இருந்த மதராசப்பட்டணத்தை நம் கண் முன் நிறுத்துகிறார் கலை இயக்குனர் செல்வக்குமார். பேனா போன்ற சிறு விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அவரது செட்டுகளை கால வித்தியாசப்படுத்தும் ஒளிக்கலவைகளுடன் தனக்கே உரிய பாணியில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் நீரவ் ஷா. பூக்கள் பூக்கும் மற்றும் ஆருயிரே பாடல்களில் ஜி.வி.யின் இசைக்கு திரையில் பலம் சேர்க்கிறார். ஆருயிறரே செட் மற்றும் லொகேஷன்கள் கண்களுக்கு விருந்து.
இசையில் தனது அடுத்த பரிமாணத்தை எட்டி இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.பாடல்களும், பிண்ணனியும் அற்புதம். ‘மறந்துட்டியா’ என்று நாயகி ஆர்யாவை கேட்க அப்போது வரும் பின்னணி இசை நெஞ்சை உருக்குகிறது.
பின்னணி விஷயங்கள் போக திரையை மட்டுமல்லாமல் எப்போதும் நம் மனதையும் ஆக்கிரமிப்பவர் நாயகி ஏமி ஜாக்ஸன். அத்தனை உணர்ச்சிகளையும் கச்சிதமாக வெளிக்கொணரும் இந்த கொள்ளை அழகு ஆங்கிலப் பெண்மணி 2009 ஆம் ஆண்டுக்கான வோல்டு டீன் அவார்டு வென்றவராம்.ஆர்யா – ஏமி செம கெமிஸ்ட்ரி.
பாலாவின் பட்டறையிலிருந்து வந்திருக்கும் ஆர்யாவின் நடிப்பு பற்றி கேட்கவே வேண்டாம். அவ்வளவு நேர்த்தி. வில்லன், நாசர், தங்கை, நிகழ்கால வயதான ஹீரோயின், ட்ராவல் ஏஜன்சி காரர் என மற்ற எல்லோரும் தங்கள் பாத்திரங்களை நன்றாகவே செய்துள்ளனர்.
பாடல்களில் காதல் ரசம் பிழிந்துள்ளார் நா. முத்துக்குமார். முதல் இரண்டு பாடல்களுக்கும் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறேன் என ஒரு பேட்டியில் கூறினார்.
கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் உடைகள். சுதந்திரத்துக்கு முன் நாடு முழுவதும் எல்லோருமே இப்படித்தானா எனத் தெரியவில்லை. அதிக சிரமம் இன்றி எந்த மொழிக்கும் நேட்டிவிட்டி மாறாமல் டப் பண்ணிவிடலாம். சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்த ராவணன் இவ்விஷயத்திலும் சோடை போனது நினைவிருக்கலாம்.
மணிக்கூண்டை உடைத்து வில்லன் விழுகும் காட்சியில், “200 வருஷமா ஓடிக்கிட்டு இருந்த கடிகாரத்த சல்லி சல்லியா ஒடச்சுட்டீங்களேடா” என்று வடிவேல் பாணியில் தியேட்டரில் சிலர் கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
பல இடங்களில் டைட்டானிக் வாசம். இதற்கு முன் வந்து சக்கைபோடு போட்ட நாட்டுப்பற்றுப் படங்களான லகான், ரங்க் தே பசந்தி போன்றவையும் ஆங்காங்ககே உணர முடிகிறது. ரஹ்மான் இசையில் சுபாஷ் கய் இயக்கிய கிஸ்னா ஹிந்தி படத்தின் சாயல் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
எது எப்படியோ தமிழில் நன்றாக வந்திருக்கும் இத்தகைய முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
மதராசப்பட்டினம் - நிச்சயம் பார்க்க வேண்டிய கலைக்காவியம்.
Subscribe to:
Posts (Atom)