தற்போது ஏற்பட்ட மழை வெள்ளம் போன்ற ஒன்றை மிண்டும் எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன செய்யலாம் என்பு குறித்த எனது பார்வை.
தொடர்புகள் :
1) வெறும் 900mAh கொள்ளளவு பேட்டரி கொண்ட அடிப்படை மொபைல் போன், குரல் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் உபயோகத்திற்கு சில நாட்கள் வரை உயிரோடிருக்கும் .
2) பவர் பேங்க் எனப்படும் தொலைபேசி மற்றும் இன்ன பிற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள உதவும் புற பேட்டரிகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வாட்சாப் போன்றவைகளை உபயோகிக்க உதவும். இருநூற்றைம்பது ரூபாய் முதல் கிடைக்கின்றன.
http://www.snapdeal.com/products/mobiles-power-banks
3) பிஎஸ்என்எல் தரைவழி மற்றும் செல் போன் இணைப்பு. இக்கருத்து வேடிக்கையானதாக இருக்கலாம்.
எல்லா வெள்ள நாட்களிலும் தரைவழி தொலைபேசியில் சென்னையில் இருக்கும் என் உறவினரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. இவை உங்கள் பகுதியில் உள்ள தொலைபேசி அலுவலகத்திலிருந்தே தமக்கான மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றன. அங்கு நாட்கணக் கிலான மின்வெட்டை சமாளிக்கும் மின்சார சேமிப்புத் தொகுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
மின்வேட்டுக்குப் பின்னர் மொபைல் கோபுரங்கள் டீசல் ஜெனரேட்டர் மூலம் இயக்கப்பட்டன.தனியார் ஆபரேட்டர்கள் ஒரு நாளுக்குள் இதையும் நிறுத்திவிட்டனர் . பிஎஸ்என்எல் மட்டுமே இழப்புகளை ஏற்று தொடர்ந்து இயங்கியது .
வெள்ளத்தின் போது சென்னையில் இயங்கிய மொபைல் கோபுரங்களின் தோல்வி விகிதம் பின்வருமாறு (ஆதாரம்: தி இந்து 6-12-2015)
பிஎஸ்என்எல். 22.5%
ஏர்டெல். 53%
ஐடியா. 84%
ரிலையன்ஸ். 80%
ஏர்செல். 60%
SSTL. 82%
DDSL. 94%
வோடபோன் 100% (1669 கோபுரங்களும் வேலை செய்யவில்லை )
மின்சாரம் :
4) பொருளாதாரம் ஒத்துழைத்தால் MPT வசதி கொண்ட சூரிய ஒளி மின்சார சாதனத்தை பொருத்திக்கொள்ளவும். பின்னர் மின்சாரம் பற்றிய கவலை இல்லவே இல்லை. மேகமூட்டம்,மழை நாட்களானாலும் அதன் உற்பத்தி குறையுமே தவிர முற்றிலும் நின்றுவிடாது.
மற்ற நாட்களிலும் இவை நிறைய பணத்தை மிச்சப்படுத்துகிறது. கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் 40% கட்டணத்தை சேமிக்கினறோம். ஃ ப்ரிட்ஜும் தண்ணீர் பம்பும் மட்டுமே மின்சார வாரியத்தைச் சார்ந்து உள்ளன.
குடிநீர் :
5) மழை பெய்தால் அதை விட சிறந்த குடிநீர் ஏதும் இல்லை.
எந்த நீரானாலும் 15 நிமிடங்கள் பிரஷர் குக்கரில் 5 விசில்வரை கொதிக்க வைத்தால் பாதுகாப்பானதாகவிடும்.
உணவு:
6) உப்பும் சக்கரையும் கலந்த தண்ணீரை குடித்தே ஒன்றிரண்டு நாட்களை ஓட்டமுடியும்.
கழிவறை:
7)வீட்டிற்கு வெளியே இருக்கும் வெல்ல நீரையே கழிவறையைச் சுத்தம் செய்ய உபயோகித்துக் கொள்ளலாம்.
வாகனங்கள் :
8) ஒருபோதும் ஓடும் நீரில் வாகனங்களை ஓட்ட முயற்சிக்க வேண்டாம். மூன்று அடி உயர ஓடும் வெள்ளத்திலேயே இழுத்துச் செல்லப்படும் வாய்ப்புகள் அதிகம்.
வாகனத்தின் உள்ளோ மேலோ அமர்ந்து தப்பிக்க முயற்சிக்க வேண்டாம். தள்ளியே இருக்கவும்.
9) ஆர்வம் இருந்தால் HAM ரேடியோ பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பேரிடர் கால உபயோகத்திற்கான ஒரு தொடர்பு உத்தி. சாதாரண ரேடியோ பெட்டி போலவே இருக்கும் இவைகளை 3-4 ஆயிரம் விலைகளில் இருந்தே வாங்கலாம். இதே போன்றதொரு கருவி உள்ள எவரிடமும் VHF அலைவரிசையில் தொடர்பு கொண்டு செய்திகளை அனுப்ப/பெற முடியும். இதற்கான இயக்க உரிமத்தை ஒரு சிறு தேர்வு எழுதிப் பெறலாம். தென் மாநிலங்களுக்கான இதன் அலுவலகம் சென்னை கந்தன்சாவடியில் உள்ளது. மேலும் விபரங்களுக்கு
http://www.hamradio.in/amateur_radio/
10) மத்திய அரசாங்கம் நடத்தும் தேசிய பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நிறுவனத்தில் அட்டவணைப்படி நாடு முழுவதும் வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம் , நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் அனைத்திற்கும் மேலாண்மைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குறைந்த விலையில் இணையம் மூலமாகவும் கற்றுக்கொள்ளலாம். விவரங்களுக்கு http://nidm.gov.in
தங்களுக்குத் தெரிந்த வேறு வழிமுறைகள் இருந்தாலும் சேர்த்துப் பகிருங்கள்.